சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை (டிசம்பர் 11) ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியாததால், பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னை-டெல்லி, மங்களூரு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.