புஞ்சை புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாரம்பாளையம், முந்திரி தோப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் சுப்புரத்தினம் தலைமையில் சத்தியமங்கலம் குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் புளியம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கு சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் கட்டு சேவல்களை வைத்து சூதாட்டம் நடத்தி கொண்டு இருந்தனர்.
அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 5 சேவல்கள், ரூ.97 ஆயிரத்து 120 பணம், 11 கைப்பேசிகள், 13 இரு சக்கர வாகனங்கள், சேவல் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
“இந்தப் பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கட்டுச் சேவல்களைக் கொண்டு வந்து சிலர் தொடர்ந்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக தோட்டம் காடுகளுக்கு செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது. மேலும் திருட்டு சம்பவம் நடக்கிறது,” என பொதுமக்கள் புகார் கூறினர்.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

