சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பயணிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இணைய முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அப்பரிசு வழங்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது.
கணினி குலுக்கல் முறையில் ரொக்கப் பரிசு பெறும் பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் ஏப்ரல் மாதத்திற்கான 13 வெற்றியாளர்களைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் தேர்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்குத் தலா ரூ.10,000, மீதமுள்ள 10 பேருக்குத் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது.
தோ்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்குப் பரிசுத் தொகை விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

