சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் துளியும் அஞ்சாமல் கைவரிசை காட்டி வரும் ரவுடிக் கும்பலை ஒழித்துக் கட்டுவதில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.
சென்னையில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது அவை குறையத் தொடங்கியுள்ளன.
கொடூரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் காவல் ஆணையர் அருண் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 2022ல் 469, 2023ல் 714 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறினார்.
2024ல் மட்டும் ரவுடிகள் 591 பேர், திருட்டு வழக்கில் சிக்கிய 76 பேர், போதைப்பொருள் தொடர்புடைய 300 பேர் உட்பட மொத்தம் 1,302 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அருண் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் ஊடகத் தகவல்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குற்றச் சம்பவங்கள் அதிகரித்த காலகட்டத்தில், உச்ச கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் கடந்த 2024ல் நியமிக்கப்பட்டார்.
முதல் கட்டமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதை அடுத்து, வீடு வீடாகத் தேடிச் சென்று ரவுடிகள் எச்சரிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், அவர்கள் ஏ, ஏ பிளஸ், பி, சி என வகைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர்.
ரவுடிகளை ஒழிக்க ரவுடிகள் ஒழிப்புப் பிரிவும் முடுக்கிவிடப்பட்டது. சென்னை பெருநகரக் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு தொடங்கப்பட்டு ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டது.
இதனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறையத் தொடங்கியுள்ளன.
ரவுடிகள் ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவைச் சேர்ந்த நுண்ணறிவு இணை ஆணையர் தர்மராஜன், துணை ஆணையர் சக்தி கணேசன் மற்றும் அப்பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகளை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்துப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.