விருதுநகர்: கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முயற்சியால் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகரில் உள்ள மல்லாங்கிணறு அமைச்சரின் சொந்த ஊராகும். அண்மையில் அங்குள்ள பெருமாள் கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியது.
திரு தங்கம் தென்னரசு வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள இக்கோவிலில் குடமுழுக்குக்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றன. அப்போது கோவிலின் உட்புறத்தில் உள்ள அர்த்த மண்டபப் பகுதியை அவர் பார்வையிட்டார்.
அச்சமயம் அங்கிருந்த சுவர்களில் சில கல்வெட்டுத் துண்டுகளும் அவற்றில் தமிழ் எழுத்துகள் இருப்பதையும் கண்ட அவர், உடனடியாக பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் சாந்தலிங்கத்தை தொடர்புகொண்டார்.
அக்கல்வெட்டைப் படியெடுத்துப் படிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டதன் பேரில், ஐந்து கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன.
ஆய்வின்போது, அவை அனைத்தும் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியானது. அச்சமயம் பாண்டியர் காலத்தில் கல்குறிச்சி எனும் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்ததும், அது இடிந்துவிட்டதால் அங்கிருந்த கற்களைக் கொண்டுவந்து மல்லாங்கிணறு பெருமாள் கோவில் கட்டப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
மல்லாங்கிணறுக்குக் கிழக்கில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் கல்குறிச்சி உள்ளது. ஏற்கெனவே, இந்த ஊரில் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் தலைவனின் பாடல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

