சென்னை: சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா உள்ளிட்ட 157 மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) சட்ட விதிகளின்படி, தங்களுடைய சொத்துக் கணக்கை அளிக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட திருத்தத்தின்படி, நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்கள் தங்களுடையது மட்டுமின்றி, மனைவி, குழந்தைகளின் சொத்துக்கணக்குகளை பதவியேற்ற 90 நாள்களுக்குள் மாநகராட்சி ஆணையரிடம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் என்பவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் பதிலளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்களில் 157 பேர் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர்களில் நால்வர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர் என்றும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 43 கவுன்சிலர்கள் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனவும் மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

