சென்னை: சென்னையில் அக்டோபர் 15ஆம் தேதி ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலான்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
“கடந்த இரண்டு நாள்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றார்.
“பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம், 201க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருள்களும் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
“ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி கடும் மழை பெய்த போதிலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

