சென்னை: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர், மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
குழந்தை வைஷாலினி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததால், எலிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்துள்ளார் கிரிதரன்.
அண்மையில் அவரது வீட்டுக்கு வந்த இருவர் வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தைத் தெளித்துவிட்டு, வீடு முழுவதும் எலிகள் வராமல் இருக்க மருந்து அடித்துள்ளனர். மருந்திலிருந்து பரவிய நெடியால் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். பெற்றோர் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வேளாண்துறை அதிகாரிகள் விதிமுறை மீறி செயல்பட்டதால், அந்த தனியார் நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்தனர். தொடர்ந்து, சனிக்கிழமை அந்நிறுவனத்த்தை மூடி முத்திரை வைத்தனர்.


