தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை விமான நிலையத்தில் இருந்து இரு நாள்களில் இரண்டு டன் கரும்புகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

2 mins read
131897eb-0821-4841-8165-a7cd1f664115
ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருள்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன. - படம்: தமிழக ஊடகம்

கோவை: கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமானச் சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் ஐந்து நாள்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் மூன்று டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கான முன்பதிவும் செய்யப்படும்.

இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளைக் கொண்டு செல்வதற்கான முன்பதிவுப் பணிகள், கடந்த சில நாள்களாக மும்முரமாக நடைபெற்றன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள், “கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமானச் சேவை வழங்கப்படும் போது ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

“அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருள்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

“அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11ஆம் தேதி ஆகிய இரு நாள்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு டன் கரும்புகள் முன்பதிவு செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

“கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி மட்டும் உள்நாட்டுக்குள் 9,893 பேரும், வெளிநாடுகளிலிருந்து 1,279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன,” என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்