ராணிப்பேட்டை: பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். வயது 30.
கடந்த 2018ஆம் ஆண்டு 2ஆம் வகுப்புப் படித்து வந்த எட்டு வயதுச் சிறுமியை அந்த ஆடவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
அதன்பேரில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மோகன் ராஜைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. வழக்கை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் விசாரணை செய்து மோகன்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் குழந்தை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டார்.