சென்னை: சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, சென்னையில் ஏற்கெனவே உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ள 2,205 பேர், அவற்றைக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது வழக்கமான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனச் சென்னைக் காவல்துறை தெரிவித்தது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், காவல்துறையினர் அனுமதியோடு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 2,735 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்களில் 500 பேர் விளையாட்டு, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட காரணங்களுக்காக உரிமம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு, சேவைத் துறையில் இருப்பவர்களைத் தவிர, விதிமுறைகளின்படி மற்ற அனைவரும் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டதை அடுத்து, 2,205 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
மேலும், 30 பேர் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

