மதுரை விமான நிலையம் இனி 24 மணி நேரமும் விமான சேவைகளை வழங்க இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர்.
தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இருபத்து நான்கு மணி நேர சேவையை அளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கைக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு செவிசாய்த்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை வழங்கும்.
இதற்கிடையே, திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி வரும் ஜூன் மாதம் முடிவடையும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு தற்போது ரூ.951 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

