மதுரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரச் சேவையையொட்டி முதல் சேவையாக டிசம்பர் 20ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு மதுரை - சென்னை சேவை இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) முதல் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சென்னையில் இருந்து இரவு 8.45 மணிக்கு மதுரைக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து இரவு 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணி நேரச் சேவைக்குப் பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.
பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்குச் சென்னையைச் சென்றடைகிறது. இதன்பின், அதிகாலை சுமார் 2.15 மணிக்கு மேல் பினாங்கிற்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமானச் சேவை இல்லை என்றும் இது, 24 மணி நேரச் சேவையின் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.