சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணியில் 295 துணை ராணுவக் குழுக்கள் (ஏறக்குறைய 40 ஆயிரம் பேர்) ஈடுபட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 115 குழுக்கள் தமிழகம் வந்துவிட்டதாகவும் மீதமுள்ள வீரர்களும் தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, பாதுகாப்புப் பணிகளில் 1.40 லட்சம் காவல்துறையினர் ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவர் என தமிழக காவல்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கால செலவுகளுக்காக ரூ.1,032 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேடப்படும் குற்றவாளிகளில் இதுவரை 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. 3,579 ஆண்கள், 443 பெண்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,064ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் அஞ்சல் வாக்கு செலுத்த 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

