கோவை: ஓடும் ரயிலில் படுக்கை பலகை விழுந்து நான்கு வயது சிறுவன் படுகாயமடைந்தான்.
கோவையைச் சேர்ந்தவர் புவிதா (29 வயது). வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் கோவை திரும்பினார்.
தனது 4 வயது மகன் ஜாய்சன் தாமசுடன் நெல்லை-கோவை விரைவு ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், இரவு 11.40 மணி அளவில் மகனை கீழடுக்கில் படுக்க வைத்த புவிதா, தனக்கான படுக்கையைத் தயார் செய்தபோது திடீரென மேலடுக்குப் படுக்கை கீழே விழுந்தது.
படுக்கையைத் தாங்கிப்பிடிக்கும் இரு இரும்புக் கொக்கிகள் அறுந்ததால் அது கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் சிறுவன் ஜாய்சன் தாமஸ் நெற்றி மீது அந்தப் பலகை விழுந்ததில் அவன் படுகாயம் அடைந்தான்.
இதையடுத்து, அந்த ரயில் மதுரையைச் சென்றடைந்தபோது அங்கு மருத்துவ உதவி ஏதும் கிடைக்கவில்லை. பயணச்சீட்டு பரிசோதகரிடம் ஏற்கெனவே புவிதா இதுகுறித்து முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை.
இதனால் நெற்றியில் வழியும் ரத்தத்துடன் தனது மகனுடன் ரயிலில் இருந்து இறங்கிய புவிதா, ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மூன்று மணி நேரத்துக்குப் பிறகே சிறுவன் ஜாய்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான் இச்சம்பவத்துக்குக் காரணம் என்றும் புவிதா புகார் தெரிவித்துள்ளார்.