சென்னை: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா வரும் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகுக் கடைகள் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களைக் காப்பதில் தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.
ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அத்தகைய கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.
அதேநேரம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச் சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்க, முறையற்ற வழிகளை நாடுகின்றனர். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ள தூண்டுதலாக அமைந்து, அதன்மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்து விடுகிறது.
தமிழகத்தில் உள்ள பணக் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். ஆனால், கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், வங்கிகள், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, கடன் வாங்கியவர்களுக்கு இடையூறு ஏற்படும்படி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவை அனைத்தும் 20வது பிரிவில் வரும்.
அதன்படி, 20வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால், 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளை பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்த மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ‘‘பேரவையில் வரும் 29ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது பேசலாம்,’’ என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.