பெரியகுளம்: தேனி மாவட்டம், அழகர்சாமிபுரத்தில் முகம்மது என்பவருக்குச் சொந்தமான தோட்ட வீட்டில் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள், உரமூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஏறக்குறைய 6 அடி நீள நாகப்பாம்பு ஒன்று இந்த வீட்டுக்குள் புகுந்ததால் அங்கு இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் நீண்ட நேரம் தேடியும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். பின்னர் பாம்பு பிடி வீரர் கண்ணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிப் பார்த்தும் பாம்பு சிக்கவில்லை.
வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் பாம்பு சீறியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை லாவகமாகப் பிடித்த கண்ணன், அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.

