திருத்தணி: நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருத்தணியில் கடந்த சனிக்கிழமை மரங்களைக் காக்க ‘மரங்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மரத்தை வெட்டுவோருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அருங்குளம் பகுதியில் உள்ள மனிதநேய தோட்டத்தில் சனிக்கிழமை மரங்களுக்கு இடையில் ‘மரங்களின் மாநாடு’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அந்த மாநாட்டில் திருவள்ளூர், திருத்தணி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை திரு. சீமான் அறிவித்தார்.
அப்போது பேசிய திரு சீமான், “இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட உயிர் காற்றை தருகிற தாய்க்கு நன்றி சொல்லும் மாநாடு என்றுதான் கூற வேண்டும். இந்தக் காட்டில் புலிகள் நுழைந்ததும், ஒரு அணில் கூடக் கண்ணில்படவில்லை, அணில்களுக்கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாங்கள் போராடுகிறோம். வாக்குக்காக இருப்பவர்கள் இதுபோன்ற மாநாட்டை நடத்தமாட்டார்கள்.
காடுகளை அழித்து விரைவுச் சாலைகள் அமைத்த மத்திய, மாநில அரசுகள், தூய காற்றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கியுள்ளனர். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று சொல்வார்களே தவிர, எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு மரம் கூட நடமாட்டார்கள்.
நாம் மரம் வளர்க்க வேண்டும், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று யோசிப்போம். நாதக ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.