செந்துறை: அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராகவன் (34). இவா் பொன்பரப்பி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா்.
நான்கு நாள்களுக்கு முன்பு தலா ரூ.35 மதிப்பிலான 6,000 கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து, அதற்கான கொட்டகையில் அவற்றை வைத்து விஜயராகவன் வளா்த்து வந்தாா்.
அந்தக் கொட்டகையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) எதிா்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. அதில், 6,000 கோழிக் குஞ்சுகளும் உயிரிழந்தன. கொட்டகை முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை தீயணைப்பு வீரா்கள், விரைந்து சென்று தீயை அணைத்தனா். தீவிபத்து தொடா்பாக செந்துறை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

