புதுடெல்லி: அபுதாபியின் மினா சயீத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்வி சீ ஸ்டார் 2’ என்ற எண்ணெய் விநியோகக் கப்பலில் கடந்த 11 மாதங்களாகத் தவித்து வந்த ஏழு இந்திய கடலோடிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள கடலோடிகளையும் விரைவாகத் தாய்நாட்டிற்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கப்பலில் உள்ள எஞ்சிய ஊழியர்களுக்குக் கடந்த ஐந்து மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று இந்தியக் கடல்சார் தொழிலாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும், கப்பலின் உரிமையாளர் முந்தைய சம்பளத்திலிருந்து விசா, பயணச் செலவுகளைப் பிடித்தம் செய்துள்ளதாகவும் அவர்களின் முக்கியப் பயண ஆவணங்கள் துறைமுக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கடலோடிகளுக்கான நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கவும் அவர்களை விரைவாகத் தாயகம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சு, கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்ககம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீரிணைகள் அமைச்சு, அனைத்துலகப் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றிடம் இந்தியக் கடல்சார் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மோதலால் பாதிக்கப்பட்ட நீரிணைகளில் இயங்கும் இந்திய கடலோடிகளின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கடலோடிகள் பயணம் செய்த கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான கடல்சார் மண்டலங்களில் இயங்கும் கடலோடிகளுக்கு நேரடி கடற்படைப் பாதுகாப்பும் கூடுதல் உடற்பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


