தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளியைச் சத்தமின்றிக் கொண்டாடிய ஏழு தமிழகச் சிற்றூர்கள்

1 mins read
c19e24fa-1566-4034-9cfb-d6b77fddb2dd
வடமுகம் வெள்ளோடு சரணாலயத்தில் பறவைகள். - படம்: இந்திய ஊடகம்

ஈரோடு: இந்தியா முழுவதும் தீபாவளித் திருநாள் வெடி வெடித்து ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டபோதும், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏழு சிற்றூர்வாசிகள் மட்டும் அமைதியாகக் கொண்டாடினர்.

‘எங்களுக்கு ஒளி போதும், ஒலி வேண்டாம்’ என்ற எண்ணத்துடன் விளக்குகளை மட்டும் ஏற்றி, அவர்கள் தீபாவளியைக் கொண்டாடினர்.

காரணம், அருகிலுள்ள பறவைகள் சரணாலயந்தான்!

ஈரோட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடமுகம் வெள்ளோடு அருகே அந்தப் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான, பலவகையான உள்ளூர்ப் பறவைகளும் வலசை வரும் பறவைகளும் அந்தச் சரணாலயத்தில் முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பது வழக்கம்.

இதனால், வெடி வெடித்து அப்பறவைகளை அச்சப்படுத்தாமல், அவற்றைப் பாதுகாப்பது என்று அச்சரணாலயத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏழு ஊர்களைச் சேர்ந்த 900 குடும்பங்கள் முடிவெடுத்துள்ளன.

கடந்த 22 ஆண்டுகளாகவே அவர்கள் இந்த வழக்கத்தைக் கையாண்டு வருகின்றனர்.

தீபாவளியன்று ஒலியெழுப்பாத மத்தாப்பு வகைகளை மட்டும் கொளுத்த தங்கள் குழந்தைகளை அனுமதிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மந்தம்பாளையும் கருக்கன்காட்டு வலசு, புங்கம்பாடி உள்ளிட்ட ஏழு ஊர்க்காரர்கள் இவ்வாண்டும் அவ்வழக்கப்படி தீபாவளியை அமைதியாகக் கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்