சென்னை: நடப்பாண்டு கோடைக் காலத்தில், தமிழகத்தில் 97 விழுக்காடு அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 245.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக, இதே காலகட்டத்தில் சராசரியாக 124.9% மழை மட்டுமே பதிவாகும்.
கடந்த மார்ச் 1 முதல் மே 31 வரையிலான மூன்று மாதங்களில், கள்ளக்குறிச்சியில் 276% மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலியில் 260%, கடலூரில் 223%, கோவையில் 217%, விழுப்புரத்தில் 217%, திருவாரூரில் 214% என பல மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு பதிவானது.
சென்னையில் 129%, தென்காசியில் 109%, திருவள்ளூரில் 106% மழையும் ஆகக் குறைவாக வேலூரில் 109%, ராமநாதபுரத்தில் 104% கூடுதல் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஆக அதிகமாக, திருத்தணியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவானதாக இந்திய வானிலை நிலையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளது என்றும் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.