உயர்கல்விச் சீரமைப்பு: விரைவில் நடவடிக்கை எடுக்க ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

2 mins read
708887dd-1300-45bd-b177-34da6dbbce32
தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்கள் கடும் நெருக்கடிகளைச் சந்திப்பதாகக் கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி. - படம்: இந்து தமிழ் திசை

உயர்கல்வி நிலையங்களின் தரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்​கலைக்​கழகத்தின் முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி கூறியிருக்கிறார்.

மத்​திய அரசாங்கப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமி, தமிழ்நாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் நெருக்​கடிமிகுந்த சவால்​களை எதிர்கொள்வதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டார்.

உடனடியாகத் தீர்வுகாணப்படாவிட்டால் ​அவற்றின் தரத்துடன் தன்​னாட்சி நிலை, உலகளாவிய போட்​டித் திறன் முதலியவையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.

தமிழகப் பல்​கலைக்​கழகங்​களில் தேசியக் கல்விக் கொள்​கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை என்றால் அது குழப்​பத்தை உண்டாக்கும். தமிழகத்தின் சமூக, பொருளியல், மொழிச் சூழலுக்கு ஏற்றவாறு தேசியக் கல்விக் கொள்கை இலக்​கு​களை அடையத் தெளி​வான செயல் திட்​டத்தை விரைவில் உரு​வாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்​தில் பெரும்​பாலான பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​கள், நிரந்தரப் பதிவாளர்கள், தேர்வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர்கள், கணக்கு அலு​வலர்​கள் இல்​லை என்று பேராசிரியர் பாலகுருசாமி குறிப்பிட்டார்.

இதனால் மாணவர்​கள் பெரிதும் பாதிக்​கப்​படு​வார்​கள். ஆசிரியர்​கள், அலுவலர்களுக்கு ஊதி​யம் வழங்கமுடி​யாத அளவுக்குப் பல்கலைக்​கழகங்​கள் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

சில பரிந்துரைகளையும் பேராசிரியர் பாலகுருசாமி முன்வைத்தார்.

உயர்​கல்​வியை மதிப்பீடு செய்​ய​வும் சீரமைப்​புக்​கான செயல் திட்​டங்​களைப் பரிந்துரைக்கவும் மாநில உயர்கல்விச் சீரமைப்பு செயற்குழுவை அமைக்க வேண்​டும்; ஆசிரியர் நியமனங்​களில் வெளிப்​படைத்தன்​மை, காலக்​கெடு​வுடன் கூடிய நியமன முறையை அறி​முகம் செய்ய வேண்​டும். ஆய்வு, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, தொழில்​நுட்ப வளர்ச்சிக்​கான நிதியை உயர்த்த வேண்டும்.

அவற்றுடன் தற்​போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்​டங்​களை உரு​வாக்​கும் வகை​யில், பல்கலைக்கழகங்கள் தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்பட வேண்​டும் என்றும் பேராசிரியர் பாலகுருசாமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்