நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.
மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலையிடமும் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மனு அளித்திருக்கிறார்.
“செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டி சாலையில் உள்ள கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான வாகனங்களை நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்,” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும் மருத்துவ சேவைவாகனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறையின் அனுமதியும் பாதுகாப்பும் கோரவுள்ளோம்,” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘மாநாடு குறித்த விவரங்களை கட்சித் தலைவர் அறிவிப்பார்’ என்று கூறினார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளதால் கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டு ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்துள்ள விஜய், கட்சியின் கொடி, சின்னங்களை இம்மாதம் 22ஆம் தேதி வெளியிட்டார். அடுத்து மிகப் பெரிய அளவில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.