மதுரை: தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் நடிகை கஸ்தூரி கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவரது முன்பிணை மனுவை முன்னதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, முன்பிணை கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும் இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது,” என்று வாதிட்டார்.
நடிகை கஸ்தூரிமீது ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் நான்கு பிரிவுகள் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளாகும். இதனால் மனுதாரருக்கு முன்பிணை வழங்கக்கூடாது.” என்றும் அவர் கூறினார்.
ஆனால் நடிகை கஸ்தூரியின் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், “சென்னைக் கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராக அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை. இதனால் முன்பிணை வழங்க வேண்டும்.” என்றார்.
அப்போது நீதிபதி, “குறிப்பிட்ட சிலர் குறித்து தான் மனுதாரர் அவ்வாறு பேசினார் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சிலரை பற்றி பேசும் போது அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 14) காலை கஸ்தூரியின் முன்பிணை மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இதன் காரணமாக கஸ்தூரி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

