சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும் அதற்கான பாதுகாப்பு, அனுமதி கேட்டும் ஏற்கெனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். இதையடுத்து, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாள்கள் இல்லை என்பதாலும் இதனிடையே விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியானதாலும் மாநாடு தேதி தள்ளிப்போனது.
மாநாட்டை எந்தத் தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தவெக முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்தத் தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்தனர்.
இந்நிலையில், தவெக முதல் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) உள்ளூர் நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

