சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித்தரத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உயர்த்தும் வகையில், 6ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவுக் (AI) கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ கல்வி கற்பிக்கப்படும். ஏறக்குறைய 10.5 லட்சம் மாணவர்களின் கற்றல் திறனை உறுதிசெய்ய ‘திறன் பிளஸ்’ திட்டம் 2 முதல் 9ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படுகிறது.
புத்தகப்பைக்கு விடை
மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் மூலம் மாதத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பை இல்லா நாள்’ ஆகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பள்ளிகளுக்குத் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படும் என்றும் திரு ராஜ்மோகன் தெரிவித்தார்.
மேலும், ‘ஓடி விளையாடு’ திட்டத்தின்கீழ் தினமும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு இலவச விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
“இரண்டு ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


