காஞ்சிபுரம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவின் வாக்குறுதிகளான இலவச எரிவாயுக் கலன், குளிர்பதனப் பெட்டி உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தி, அக்கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் சோமசுந்தரம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வாக்குச் சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின்போது அதிமுக தேர்தல் வாக்குறுதிகளான இலவச எரிவாயுக் கலன், குளிர்பதனப் பெட்டி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தி அவர் வாக்குச் சேகரித்து வருகிறார்.
அத்துடன் மேளதாளங்கள் முழங்க, புலி ஆட்டம், கட்டைக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுடன் வீதி வீதியாக சென்று அதிமுகவினர் வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச் சேகரிக்க வரும் அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

