கோவை: தமிழகத்தில் மிக விரைவில் அரசு சார்பில் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ சேவை வழங்கப்படும் எனச் சுகாதார, குடும்பநலத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தமிழகம் முன்னணி வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும், ஒட்டுமொத்தச் சேவையில் தற்போது 2 முதல் 7 விழுக்காடு மட்டுமே ஈடுகட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அவசர மருத்துவச்சேவைகளுக்காக ‘ஏர் ஆம்புலன்ஸ்’ சேவை விரைவில் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“இறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளைப் பெற்று மறுவாழ்வு தருவதில் இந்திய அளவில் சிறந்த மாநிலத்துக்கான விருதைத் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் பெற்று வருகிறது,” என்றார் அமைச்சர் அருண் ராஜ்.
இந்த ஆண்டு இவ்விருதைப் பெற தாம் விரைவில் டெல்லி செல்லவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புக் கொடையாளரின் தியாகத்தைப் போற்றும் விதமாக நினைவுப்பலகை ஒன்றைத் திறந்துவைத்தார்.


