திருச்சி: இவ்வாண்டிற்கான விமானக் கடத்தல் தடுப்பு பாவனைப் பயிற்சி திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விமானக் கடத்தல் போன்ற நெருக்கடி காலங்களில் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புகளின் தயார்நிலையையும் ஒருங்கிணைப்பையும் சோதிக்கும் வகையில் இந்த பாவனைப் பயிற்சி நடத்தப்படுகிறது.
விமானம் கடத்தப்படும் சூழலில் பின்பற்றப்பட வேண்டிய முறையான செயல்பாட்டு நடைமுறைகளை அதிகாரிகள் அறிந்துகொள்ளும் வகையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்தகைய பாவனைப் பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்த பாவனைப் பயிற்சியின்போது, வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி பல அவசரகால ஒத்திகைகள் செய்துகாட்டப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி குறிப்பிட்டது.
அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு வேகம், செயல்பாட்டுத் திறன் போன்றவற்றைத் தன்னிச்சையான பார்வையாளர்கள் கண்காணித்துப் பதிவுசெய்ததாகத் திருச்சி விமான நிலைய இயக்குநர் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தார்.
இந்த பாவனைப் பயிற்சியின்மூலம் பெறப்பட்ட கருத்துகளும் மதிப்பீடுகளும் எதிர்காலப் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும்.
பாவனைப் பயிற்சியைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் என். காமினி தலைமையில் விமான நிலையக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

