சென்னை: தமிழ் நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
“மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது.
“ஆனால், மக்கள் தொகை குறைவாக உள்ள காரணத்தால் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
“இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசியலைக் கடந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்,” என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி 25) செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆனால் தற்போது தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட உள்ளது.
தற்போதுள்ள 39 நாடாளுமன்ற இடங்களுக்குப் பதிலாக இனி 31 தொகுதிகளாக மாற உள்ளது. 2021ன் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 31 எம்பிக்கள் மட்டுமே இருப்பார்கள். இதனால் மத்திய அரசாங்கத்தில் தமிழ்நாட்டின் குரல் ஒடுக்கப்படும். இது எண்ணிக்கை பிரச்சினை கிடையாது. தமிழ்நாடு மக்களின் உரிமையை மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.