சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அமமுகவின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
ஊடகங்களில் வெளியாகும் ஆருடச் செய்திகளை வைத்து அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் முடிவு செய்ய வேண்டாம் என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
“தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இப்போதும் கூறிவருகிறார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிதி ஒதுக்க முடியாது என்பதுகூட முதல்வருக்குத் தெரியாதா?
“எவ்வளவு நிதி ஒதுக்கினாலும், அவற்றையெல்லாம் கபளீகரம் செய்வதால்தான் மக்கள் ஆட்சியில் இருந்து திமுகவை மாற்றத் துடிக்கிறார்கள்,” என்றார் டிடிவி தினகரன்.
இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

