அரக்கோணம்: தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், எல்லாக் கட்சிகளும் தங்களது வாக்கு வேட்டையை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும் ஆங்காங்கே புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இவ்வேளையில், அரக்கோணம் தொகுதியின் நடப்பு எம்.பி.யும் முன்னாள் இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.
இதுபற்றி செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது குறித்துக் காணொளி ஆதாரத்துடன் புகார்கள் அளிக்கப்பட்டும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வளர்மதி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாக மாறி, மோசடிக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது,” என்று கூறியுள்ளார்.
மேலும், “நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், மாவட்டத் தேர்தல் அதிகாரியே திமுகவினரின் தேர்தல் விதிமீறல்களுக்குத் துணை போனால் தேர்தலை எவ்வாறு நியாயமாக நடத்த முடியும். இது ஜனநாயகப் படுகொலைக்குத்தான் வழிவகுக்கும். வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கும் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்; மாவட்ட ஆட்சியர் வளர்மதியைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் மும்முறை வென்றவர் ஜெகத்ரட்சகன். இம்முறை அவரை எதிர்த்து ஏ.எல்.விஜயன் (அதிமுக), வழக்கறிஞர் பாலு (பாமக), அஃப்சியா நஸ்ரின் (நாம் தமிழர்) ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.