சென்னை: முழுமையான வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அது குறித்து விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26), அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறும்போது, “141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை, நூலகங்கள், ஆய்வகங்களில் குறைபாடு என பல்வேறு வசதிகளும் முழுமையாக இல்லை. தங்களது பிரச்சினைகளை 45 நாள்களுக்குள் கல்லூரிகள் சரி செய்துவிட வேண்டும். அதைத்தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்னரே இணைப்பு அங்கீகாரம் உறுதி செய்யப்படும்,” என்றனர்.
இதனிடையே, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.