சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பாகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் இணைந்து புதன்கிழமை (செப்டம்பர் 2) காலை, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.
மேலும், தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தகுதியுள்ள பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் பேராசிரியர்கள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக இணைந்து கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், நூற்றுக்கணக்கான பேராசிரியர்களும் ஓய்வூதியர்களும் கலந்துகொண்டு நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


