சென்னை: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 3 மாதங்களாக அனைத்துலக அரசியல் படிப்பை மேற்கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். சென்னை வந்தடைந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது 3 மாத படிப்பு, உதயநிதி துணை முதல்வர் ஆனது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “அனைத்துலக அரசியல் படிப்புக்காக மூன்று மாத காலம் லண்டன் சென்று படிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று மாத காலம் பாஜகவை வழிநடத்துவதற்கு அண்ணன் எச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி மிகச் சிறப்பாக வெற்றிகரமாக பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுள்ளது.
“கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் குறிப்பாக ஹெச் ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப் பொறுமையாக காத்திருந்த பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பெரிய பெரிய ஆளுமைகள் எல்லாம் அவர்களின் சாதனைகள் முடிந்த பிறகு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் எந்த அளவுக்கு இந்தியாவின் மீது மரியாதை வைத்துள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
“நம்மிடம் இருக்கும் நிறை குறைகளை சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த மூன்று மாத காலம் கிடைத்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
“எந்தக் கட்சியிலும் இப்படி கொடுக்க மாட்டார்கள். கட்சிக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. உச்ச நடிகர் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார், அவரை வரவேற்கிறேன். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளார். மாநாட்டில் நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். பாஜகவையும் பற்றியும் பேசியிருக்கிறார்.
“உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். எம்எல்ஏ ஆனார், அமைச்சரானார், தற்போது துணை முதல்வராகியுள்ளார். வேகமாக பதவி உயர்வு கிடைத்து வருகிறது.
“திமுக என்பது ஒரு குடும்பத்திற்கான கட்சி என்பதை அவரது துணை முதலமைச்சர் பதவி உறுதிப்படுத்தி உள்ளது. அவருடைய பணியையும் பொறுத்திருந்து பார்த்து விமர்சிப்போம்.
“பாஜக ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் களம் மாறி உள்ளது.
“ஜனநாயக கட்சியாக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பிறகு தேசியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதுதான் உண்மையான ஜனநாயகக் கட்சி” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

