சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரைக் கைது செய்துள்ளனர்.
பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவரான ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், சுரேஷின் பிறந்தநாளான கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல ரவுடிக் கும்பல்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிறகு ஆற்காடு சுரேஷ் பாணியில் அவருடைய குடும்பத்தினரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக, ஆற்காடு பகுதியை அடுத்த பொன்னி கிராமத்திற்குக் குடும்பத்தினர்கள் வருவார்கள் என்பதால் ஆந்திர எல்லையோரக் கிராமங்களில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி காவல்துறையிடம் பிடிபட்டார். அவரை சென்னை அழைத்து வந்துள்ள அதிகாரிகள் கொலைத் திட்டத்துக்கான சதியில் அவருக்கு பங்கு இருக்கிறதா, பண உதவி செய்தாரா என பல கோணங்களில் விசாரணை நடத்திய நிலையில், பொற்கொடி கைதாகியுள்ளார்.