சென்னை: தென்னமெரிக்காவில் உள்ள ‘சுரினாம்’ நாட்டின் ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து ராணுவச் சீருடைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன.
சென்னை ஆவடி பகுதியில் உள்ள இந்திய முப்படையினருக்கான ராணுவச் சீருடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்தான் சுரினாம் நாட்டுக்கு அனுப்பப்படும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது 1,500 ஊழியர்கள் ஆலையில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
“முப்படைகளுக்குத் தேவையான அதிக சக்திவாய்ந்த குண்டு துளைக்காத ஆடைகள், பாதுகாப்புத் துறைக்கு தேவையான சீருடைகளைத் தயாரித்து வருகிறோம்.
“மற்ற நாடுகளின் ராணுவத்துக்கான சீருடைகளைத் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தென்னமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டிற்கு 4,500 ராணுவ உடைகள் தயாரித்து அனுப்பப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1.71 கோடி,” என்றார் திரு ரெட்டி கூறினார்.
அடுத்த இரு மாதங்களில் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ராணுவச் சீருடைகள் சுரினாம் சென்றடையும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல நாடுகளுக்கு ராணுவ உடைகளைத் தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.