பொன்னேரி: பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களிடம் அழிந்து வரும் கடல்வாழ் ஆமைகளின் இனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இனப்பெருக்கத்திற்காக கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டைகளைப் பாதுகாக்கவும், கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
நெகிழிக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுத்து சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படா வண்ணம் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வுப் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் தலைமையில் பழவேற்காடு பறவைகள் சரணாலய வணவர் நரசிம்மன் கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சபாபதி ஆகியோர் மாணவர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.