தென்காசி: புளியங்குடி மூன்று பெண்களைக் கடித்த கரடி காட்டுக்குள் தப்பிச்சென்றது. அதனைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புளியங்குடி வீரப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சேகுமைதீன் மனைவி சேகம்மாள் (52), காலாடி நடுத்தெருவைச் சேர்ந்த ராமர் மனைவி ராமலெட்சுமி (43), காலாடி வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கி மனைவி அம்பிகா (44) ஆகியோா் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை மலையடிவாரப் பகுதியில் மணக்குடையார் கோயில் அருகேயுள்ள எலுமிச்சைத் தோட்டத்தில் பழம் பறிக்கச் சென்றனராம்.
அப்போது அந்தப் பெண்களைச் சுற்றிவளைத்த கரடி ஒன்று, அவர்களைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. அதில் காயமடைந்த மூன்று பெண்களும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையறிந்த உறவினர்கள், விவசாயிகள் தென்காசி-மதுரை சாலையில் ஒன்றுதிரண்டனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கவும் வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி அவா்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனத் துறையினரும் காவல் துறையினரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற கரடியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். அதனை உயிருடன் பிடிக்க அந்தப் பகுதியில் அவர்கள் இரவு பகலாகக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.