சென்னை: பாரதியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
“மொழி, நாடு, பெண் விடுதலை, பிற்போக்குத்தனம் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியாவின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!” என்று ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரைச் சாலையிலுள்ள பாரதியாரின் உருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.