கோவை: அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை கோவை சென்றார்.
சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட அவா், காலை 11 மணிக்கு கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இறங்கினார்.
அங்கிருந்து, விளாங்குறிச்சி சென்ற முதல்வா் அங்கு 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
மேலும், பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு அவரை வரவேற்கக் காத்திருந்தனர். ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பல கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
எல்காட் வரை முதல்வரின் வாகனம் ஊர்ந்து சென்றது. மக்கள் திரண்டிருந்து அளித்த வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான காணொளிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், “நல்லா இருக்கீங்களா தலைவரே… எனக் கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு. 4 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க ஒரு மணிநேரம் ஆனது. கோவை மக்களின் அன்பு,” என்று இதயக் குறியுடன் அவர் பதிவிட்டுள்ளார்.

