புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியலில் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, வரும் ஜூலை 10 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் செய்யப்படும் என்று கடந்த ஜூன் 24ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரியின் சரிபார்ப்புப் பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை நீங்கள் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதியில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில், பீகாரில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கக் குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.