இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது: தமிழக ஆளுநர் உரை

இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது: தமிழக ஆளுநர் உரை

2 mins read
17c53092-5a04-4b00-bf61-2bc25272fedb
தமிழக ஆளுநர் அர்லேகர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: “தமிழ் நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும். மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய கல்விக்கொள்கை ஏற்கப்படாது. மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கான நிதிப்பகிர்வினைப் பெறுவதற்கு சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும்,” என தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த உரையில், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டு சாதி, மத, பண அரசியலைத் தாண்டி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் விஜய்யால் மட்டுமே முடியும் என மக்கள் முடிவு செய்து தேர்தெடுத்துள்ளனர்.

தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வை ஒன்றிய அரசு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் செலுத்தும் வரியிலிருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வினைப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் மாநில நலன் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும்.

தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கான மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும்.

தமிழகத்துக்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும் என்று ஆளுநர் வாசித்த அந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்