சென்னை: லண்டனில் இருந்து தமிழகம் திரும்பும் அண்ணாமலை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.கா தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் அனைத்துலக அரசியல் மேற்படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி லண்டன் சென்றார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28ஆம் தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
அடுத்த மாதம் 1ஆம் தேதி கோவை கொடிசியாவில் ‘வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.
இதற்காக டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்குச் செல்கிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக வருகிற 30ஆம் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகிறார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.