சேலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலை மீது கறுப்புச் சாயம் வீசப்பட்டதால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு 16 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்தச் சிலையின் மார்பு மற்றும் கால் பகுதிகளில் மர்ம நபர்கள் கறுப்புச் சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் வரவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், திமுக மூத்த தலைவரும் முதல்வர் ஸ்டாலினின் தந்தையுமான மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கறுப்புச் சாயம் ஊற்றி அவமதித்தது யார், காரணம் என்ன என்பன குறித்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.