சென்னை: திடீர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
வெள்ளிக்கிழமை காலை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், வெடிகுண்டுகளைக் கண்டறியும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டதாகவும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை பின்னர் தெரிவித்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என முடிவானது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பத்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை கூறியது.
அண்மைக் காலமாக நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரயில், விமான நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு வரும் இத்தகைய மிரட்டல்கள் காரணமாக, பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

