சென்னை: மது போதையில் சிறுவன் மீது காரை மோதி அவனது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி சென்னை எழும்பூர் மகப்பேறு அருகே சாலை விபத்தொன்று நிகழ்ந்தது. நடைபாதையோரம் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் உள்ளிட்ட சிலர் மீது, சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென மோதியது. இதில் அந்த 12 வயதுச் சிறுவன் உயிரிழக்க, நான்கு பேர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான காரை தனியார் மதுபான ஆலை நிர்வாகி ஷாஜி புருஷோத்தமன் தான் ஓட்டினார் என்பது உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. எனினும், உயர் நீதிமன்றத்தில் மேல் மூறையீடு செய்தார் தொழிலதிபர் ஷாஜி. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணையும் வழங்குவதாக தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


