பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ‘புல்லட்’ என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தூக்கிச் செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் 35 வீடுகளை இடித்து, மனிதர்களையும் தாக்கி வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த வாரம் மூன்று நாள்களாகத் தொடர்ந்து வீடுகளை இடித்து வந்த நிலையில், இரு கும்கி யானைகளின் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் 75 வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கும்கி யானைகளைப் பார்த்தவுடன் ‘புல்லட்’ யானை வனப்பகுதிக்குள் பதுங்கியது. இதனால். யானை வேறு பகுதிக்குச் சென்றுவிட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், சனிக்கிழமை (டிசம்பர் 21) இரவு சேரம்பாடி ‘டான்டீ’- பகுதியில் ஆறு வீடுகளை இதே யானை இடித்துச் சேதப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) காலை, வனப் பணியாளர்கள், இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அரசு தேயிலைத் தோட்டத்தில் எட்டு காட்டு யானைகளுடன் வலம் வரும் ‘புல்லட்’ யானையை ஆளில்லா வானூர்தி மூலம் தீவிரமாகக் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதைத் தடுக்கும் முயற்சியில் வனக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.