கோவை: இயற்கைத் தாவரங்களில் இருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் புதிய மருத்துவச் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஃபிரான்சிஸ் ஜெகன் ராஜுக்கு அனைத்துலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புற்றுநோயியல் ஆராய்ச்சித் துறையில் உலக அளவில் முன்னணியில் திகழும் ‘கொரியன் சொசைட்டி ஆஃப் மெடிக்கல் ஆங்காலஜி’ அமைப்பு நடத்தும் 2026ஆம் ஆண்டிற்கான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடினமான போட்டித் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு, மாநாட்டில் பங்கேற்பதற்கான பயண மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைத் தாவரங்களில் நிறைந்துள்ள உயிரியல் ரீதியாகச் செயல்படும் முக்கியச் சேர்மங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பிரித்தெடுத்து, புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியும் என்பதைச் சோதித்து மதிப்பிடுவதே அவரது முக்கியமான ஆராய்ச்சியாகும்.
இதுகுறித்து qபிரான்சிஸ் ஜெகன் ராஜ் கூறுகையில், “தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய்க்குத் தீர்வு காண்பது உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. எனது இந்த ஆராய்ச்சிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம், தாவரவியல் வழியிலான புற்றுநோய் சிகிச்சை முறைகளுக்கு மேலும் புதுவேகம் அளிக்கும்,” என்றார்.


